மாஸ்கோ: சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு அதிபர் ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (எச்டிஎஸ்), சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன. சிரியா அதிபர் ஆ-சாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன. இந்த சூழலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் கடந்த 8-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றின. அதிபர் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த நவம்பர் இறுதியில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மிகப்பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சிக் குழு தொடங்கியது. ஆசாத் படையில் இருந்த பல்வேறு ராணுவ தளபதிகள் கிளர்ச்சிக் குழுவுடன் ரகசியமாக கைகோத்தனர். இதன் காரணமாக அலெப்போ உள்ளிட்ட நகரங்களில் கிளர்ச்சிக் குழு வீரர்களுடன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபடவில்லை. தீவிர போரை தொடங்கிய 13 நாட்களில் தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிக் குழுக்கள் சுற்றிவளைத்தன. அங்கும் அதிபர் ஆசாத் படை வீரர்கள் போரில் ஈடுபடவில்லை.
இதனிடையே துருக்கி, ரஷ்யா, ஈரான் நாடுகளின் மூத்த அதிகாரிகள், கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 7-ம் தேதி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். கிளர்ச்சிக் குழுக்கள் சார்பில் துருக்கி அதிகாரிகளும் அதிபர் ஆசாத் சார்பில் ரஷ்யா, ஈரான் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆசாத் பத்திரமாக வெளியேற கிளர்ச்சிக் குழுக்கள் ஒப்புக் கொண்டன. இதேபோல சிரியாவின் லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளம், சிரியாவின் கிமெய்மிம் பகுதியில் உள்ள ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கிளர்ச்சிக் குழுக்கள் உறுதி அளித்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் சிரியா அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் உள்ள தனது மாளிகையில் இருந்து லடாகியாவில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு ரகசியமாக சென்றார். அங்கிருந்து கடந்த 8-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே அதிபர் ஆசாத்தின் மனைவி அஸ்மா மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் ரஷ்யாவில் தஞ்சமடைந்து விட்டனர். தற்போது அதிபர் ஆசாத்தும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆஸ்திரியாவில் உள்ள ரஷ்ய தூதர் உலினோவ் கூறும்போது, “சிரியா அதிபர் ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. எங்களது நண்பர்களை நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்று தெரிவித்தார். ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா கூறும்போது, “விமான விபத்தில் அதிபர் ஆசாத் உயிரிழந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் பொய்களை பரப்பின. இதற்காக மேற்கத்திய ஊடகங்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” என்றார்.
அதிபரின் மாளிகை சூறை: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் ஆசாத்தின் மாளிகைக்குள் கிளர்ச்சிக் குழு வீரர்கள், போராட்டக்காரர்கள் கடந்த 8-ம் தேதி நுழைந்தனர். அந்த மாளிகையில் 40 சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை கிளர்ச்சிக் குழுவினர் ஓட்டிச் சென்றனர். அதிபர் மாளிகையில் இருந்த சோஃபா, சேர்கள், கட்டில்கள், ஆடம்பர பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.