பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோ மீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள 'என்க' (Enga) மாகாணம். இங்குள்ள காகலம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக 'ஏபிசி' செய்தி தகவல் தெரிவிக்கிறது.
இதனால் ஏற்பட்ட துல்லியமான பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர். நிலச்சரிவில் புதையுண்டு இறந்தவர்களின் உடல்களை உள்ளூர்வாசிகள் வெளியே எடுப்பதை சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் காணமுடிகிறது.
பப்புவா நியூ கினியா என்பது 800 மொழிகள் பேசுவோரைக் கொண்ட வளரும் நாடு. இங்கு வாழ்வாதாரம் பெரும்பாலும் விவசாயமாகும். பெரிய நகரங்களில் சில சாலைகள் உள்ளன.
27 மில்லியன் மக்கள் வசிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக (10 மில்லியன்) மக்கள்தொகை கொண்ட தென் பசிபிக் நாடு பப்புவா நியூ கினியாவாகும்.