மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்பு உள்ள தேதிகள் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மூன்றாம் உலகப் போர் பற்றிய கருத்து பல தசாப்தங்களாக தீவிர ஊகங்கள் மற்றும் விவாதமாக இருந்து வருகிறது. முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் உலக மக்களின் நினைவில் இருந்து அகலாத நிலையில், மற்றொரு பெரிய அளவிலான போர் குறித்த சிந்தனை திகிலூட்டும் நிலையில் உள்ளது.
ஆனால், தற்போது ரஷ்யா - நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவற்றால் மூன்றாம் உலகப் போர் குறித்த நினைவுகளை மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன.
நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல ஜோதிடர்கள் மூன்றாம் உலகப் போர்கள் குறித்த கணிப்புகளை செய்துள்ளனர். ஆனால் அதன் சாத்தியம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இருப்பினும், அவ்வப்போது இதுபோன்ற கணிப்புகள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்த வரிசையில் சமீபத்தில் இந்திய ஜோதிடர் குஷால் குமார் இணைந்துள்ளார். இவர் தனது கணிப்பை 'லிங்க்டு இன்’-ல் பகிர்ந்துள்ளார். ஜோதிடர் குஷால் குமார் கணிப்புப் படி, மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.
'லிங்க்டு இன்’-ல் குஷால் குமார் பகிர்ந்துள்ள தகவல்படி, இவர் ஒரு வேத ஜோதிடர் ஆவார். இவர், எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி முன்னறிவிப்பதற்காக கிரகங்களின் சீரமைப்பைக் காட்டும் விளக்கப்படங்களைப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
குஷால் குமார் வெளியிட்டுள்ள தகவலில், “2024 மே 8ல் போர் நிலைமைகள் மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் என கணிக்கப்பட்டது - இது கொரியாக்கள், சீனா - தைவான், வடமேற்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் தீவிரமடையும் என கணிக்கப்பட்டது.
சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை சமாளிக்க மிகவும் கஷ்டப்படக்கூடும் என்றும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது ராஜினாமா செய்யலாம்.
அரசியல் களத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியாது. சுருக்கமாக, பாதிக்கப்படக்கூடிய இடங்களில், ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை எடுக்க ராணுவம் முன்வரலாம் என்று சமகால கிரக நிலைகள் தெரிவிக்கின்றன.
இப்போது, 2024 ஜூன் 18 (செவ்வாய்க்கிழமை) மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலைகளைக் கொண்டுள்ளது. எனினும் ஜூன் 10 மற்றும் 29 ஆகிய தேதிகளையும் இதனுடன் கூறலாம்" என தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவின் பஞ்சகுலாவைச் சேர்ந்த ஜோதிடர் குஷால் குமார், உலக நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடர் என தன்னை வர்ணித்துக் கொள்கிறார். இதனால் மூன்றாம் உலகப் போர் குறித்த அவரது முன்னறிவிப்பு செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...