தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
யூடியூப் போன்ற சமூக ஊடக சேனல்கள் மூலமாக ரஷ்யாவில் அதிக ஊதியத்துடன் வேலைகள் காலியாக இருப்பதாக விளம்பரங்கள் செய்து ஏஜென்ட்கள் பலர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள இளைஞர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி ரஷ்யாவுக்கு கடத்தி வந்துள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப் பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக ரஷ்யா-உக்ரைன் போரில் முன்னிறுத்தப்பட்டனர், அது அவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சிபிஐ, வேலைவாய்ப்பு மற்றும் அதிக சம்பளம் தரும் வேலை என்ற போர்வையில் இந்திய நாட்டினரை ரஷ்யாவிற்கு கடத்துவதில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் மற்றும் பலர் மீது மார்ச் 6-ம் தேதி மனித கடத்தல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக சென்னை உட்பட நாட்டின் ஏழு இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேரை தற்போது சிபிஐ கைது செய்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களைக் கடத்தி வந்ததும், கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
இவர்கள் நான்குபேரில், ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய தற்காலிக ஊழியரும் ஒருவர் எனவும், அவர்மூலம் போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து இளைஞர்களை போரில் ஈடுபட வைக்கும் செயலில் இந்த கும்பல் செயல்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.