அதிரடி ... காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துக்களை முடக்க முடிவு


சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜார்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும், காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துக்களை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு, இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குருபத்வந்த் சிங்

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துக்கள், சீக்ஸ் ஃபார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று முன்தினம் முடக்கியது.

இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துக்களை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பரம்ஜித் சிங், குல்வந்த் சிங், சுக்பால் சிங், குருப்ரீத் சிங், துபிந்தர் ஜீத் பாகிஸ்தானில் உள்ள வத்வா சிங் மற்றும் அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் உள்ள சில தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த 19 தீவிரவாதிகளுக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துக்களை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) முடக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

x