இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் யார்?


இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64) உயிரிழந்தார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் 2,000-க்கும் மேற்பட்ட முகாம்களை குறிவைத்து போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் பலமுனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெபனானை குறிவைத்து 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

லெபனானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 8 மீட்டர் முதல் 80 மீட்டர் வரையிலான ஆழத்தில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பல கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளனர். தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகத்துக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்க வீடு இருக்கிறது. அந்த சுரங்க வீட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள், பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் சுரங்கப் பாதைகள், சுரங்க வீடுகளை அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன குண்டுகளை கடந்த 27-ம் தேதி இரவுவீசியது. சுமார் 6 அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து 80 டன் எடை கொண்டகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 6 கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்துக்கு குண்டுகள் துளைத்துச் சென்றன.

இஸ்ரேல் விமானப் படையின் இந்த தாக்குதலில் சுரங்க வீட்டில் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அவரோடு தங்கியிருந்த அவரது மகள் ஜைனபும் உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்பை இஸ்ரேல் ராணுவமும் ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்தன.

யார் இந்த ஹசன்? - கடந்த 1960-ம் ஆண்டில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹசன் நஸ்ரல்லா பிறந்தார். இவரது தந்தை காய்கறி வியாபாரி. சிறுவயது முதலே ஆன்மிகத்தில் அதிகஈடுபாடு கொண்ட ஹசன், இமாம் சையது மூசாவின் சீடராக இருந்தார்.

கடந்த 1975-ம் ஆண்டில் லெபனானில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அப்போது இமாம் சையது மூசா, புதிய ஆயுத அமைப்பை உருவாக்கினார். இதில் 15 வயது சிறுவனான ஹசன் நஸ்ரல்லா இணைந்தார்.

கடந்த 1982-ம் ஆண்டில் லெபனான், இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றது. அந்த ஆண்டில் ஹசன் நஸ்ரல்லாவும் சையத் அப்பாஸ் மூசாவியும் இணைந்து ஹிஸ்புல்லா அமைப்பை தொடங்கினர். புதிய அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆதரவு அளித்தன.

இஸ்ரேல் பிடியில் இருந்து பாலஸ்தீனத்தை மீட்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்தி ஹிஸ்புல்லா செயல்பட்டது. இஸ்ரேலை குறிவைத்து அந்த அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத் தியது.

கடந்த 1992-ல் ஹிஸ்புல்லா தலைவராக ஹசன் நஸ்ரல்லா பதவியேற்றார். ஹிஸ்புல்லாவை அரசியல் அமைப்பாகவும் லெபனானின் துணை ராணுவ படையாகவும் அவர் மாற்றினார்.

தற்போது ஹிஸ்புல்லாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். அதோடுஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளன. சுமார் 50 ஆண்டுகள் ஹிஸ்புல்லாவை வழிநடத்திய ஹசன் மரணம் அந்த அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

x