பாமாயில் ஏற்றிச் சென்ற நார்வே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்... செங்கடல் பகுதியில் பதற்றம்!


தாக்குதலுக்கு உள்ளான நார்வே கப்பல்

செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி அருகே சென்ற நார்வே நாட்டு ஸ்டிரிண்டா எனும் டேங்கர் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹவுதி

காஸாவில் போர் தொடுத்துள்ள இஸ்ரேல், அங்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்காத வரை, அந்நாட்டிற்கு செல்லும் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஏமனின் ஹவுதி அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது.

இந்நிலையில், ஏமன் கடல் பகுதிக்கு அருகே செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி அருகே நார்வே நாட்டு கொடியுடன் சென்ற ஸ்டிரிண்டா எனும் டேங்கர் கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கப்பலில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பல்

ஸ்டிரிண்டா கப்பல் மலேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக இத்தாலி செல்வதாக அக்கப்பல் நிறுவனத்தின் சிஇஓ கெய்ர் பெல்ஸ்னெஸ் கூறி உள்ளார். ஆனால், இந்த கப்பல் இஸ்ரேல் செல்வதாகவும் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதன் மாலுமிகள் உடன்படாததால் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிடிகேட் ஜெனரல் யஹ்யா சாரி கூறியுள்ளார்.

ஏற்கெனவே பதற்றத்தில் உள்ள செங்கடல் பகுதியில் இது மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

x