அன்று தொழிலாளி மகன்... இன்று இலங்கை அதிபர்! - யார் இந்த திசாநாயக்க?


இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) முன்னணி வேட்பாளர் அநுரா குமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றார். இலங்கையின் 9-வது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்தும், திசாநாயக்க பின்புலம் குறித்தும் பார்ப்போம்.

இலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர்.

வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் அதிக எண்ணிகையில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கடந்த தேர்தல்களை விட நீளமான 2 அடி நீளத்தில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டது. தேர்தலில் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சுமார் 70% வாக்குகள் பதிவாகின. சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்து. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருந்து வந்தார். அவருக்கு 42.31% (5,634,915) வாக்குகளும், சஜித் பிரேமதாசவிற்கு 32.76% (4,363,035) வாக்குகளும், ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% (2,299,767) வாக்குகுளும், நமல் ராஜபக்சவுக்கு 2.57 % (342,781) வாக்குகளும், அரியநேந்திரனுக்கு 1.70% (226,343) வாக்குகளும் கிடைத்தன. ஆனால், வெற்றிக்குத் தேவையான 50% வாக்குகளை யாரும் பெறவில்லை.

இலங்கை அதிபர் தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால், ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணியளவில் இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால், முதல் இரு இடங்களைப் பெற்ற அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

இலங்கையில் அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு முறையில் நடைபெறும். வாக்காளர்கள் அதிகபட்சம் ஒரு வாக்குச்சீட்டில் மூவருக்குத் தமது விருப்ப வாக்குகளை அளிக்கலாம். 50 சதவீதத்துக்கு அதிகமாக முதற்கட்ட விருப்ப வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

முதற்கட்ட விருப்ப வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், இதில் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட விருப்ப வாக்கெடுப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் 2-ம் விருப்பத் தேர்வாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் கணக்கிடப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

இதன் பின்னரும் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாவிட்டால் 3-ம் விருப்ப வாக்கு கணக்கிடப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் அதிபராவார். இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டதில் அநுர குமார திசாநாயக்க அதில் வெற்றிப் பெற்றதால் மொத்தம் 5,740,179 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது வந்த சஜித் பிரேமதாச மொத்தம் பெற்ற வாக்குகள் 4,530,902 ஆகும்.

அநுர குமார திசாநாயக்க யார்? - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் கூலி தொழிலாளியின் மகனாய் அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)-யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.

2014ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார்.

மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் கூறுகையில், “இந்த சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி இலங்கையை படைப்போம்” என்றார்.

x