ரஷ்ய ஹெலிகாப்டர் திடீர் மாயம்: பயணித்த 22 பேரின் கதி என்ன?


மாஸ்கோ: மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், ரஷ்யா நாட்டின் கம்சட்காவின் கிழக்கு தீபகற்பத்தில் காணாமல் போனதாக அந்நாட்டின் மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

எம்ஐ-8டி ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் (Vachkazhets) எரிமலைக்கு அருகிலுள்ள ஒரு தளத்திலிருந்து புறப்பட்டது. ஆனால் சில மணிநேரங்களிலிலே 04:00 GMT என்ற நேரத்தில் அந்த ஹெலிகாப்டரிலிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8டி ரகம், ரஷ்யாவிலும் அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகாப்டர் ரஷ்யாவின் கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது. 13 பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்களுடன் வித்யாஸ்-ஏரோ நிறுவனத்தால் இயக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டர், கம்சட்கா தீபகற்பத்தின் தெற்கில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

கம்சட்கா தீபகற்பம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான பகுதியாகும். இது மாஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கிமீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது.

x