ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 5 பேர் மரணம்: நேபாளத்தில் அதிர்ச்சி


காத்மாண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸி செல்லும் போது இன்று பிற்பகலில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. விமானம் பறக்கத்தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் அலுவலக ஊழியர்களுடனான தகவல் துண்டிக்கப்பட்டது. ஏர் டைனஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் உள்ள சூர்யா சவுர்-7 என்ற மலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தாகவும் அதில், விமானி மற்றும் சீனாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், மூத்த கேப்டனான விமானி அருண் மல்லாவால் இயக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், விமானத்தில் பயணித்த 5 பேரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். உயிரிழந்த 5 பேரில் சடலங்களையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

x