இலங்கை அதிபர் தேர்தலில் மகனை வேட்பாளராக களமிறக்கிய மகிந்த ராஜபக்ச


இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை விட 13 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்று மகிந்த ராஜபக்ச பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. இதனால் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அத்துடன் மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி முறைக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து 22.07.2022 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.

அவரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21 அன்று அதிபர் தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவித்தது. இதற்காக ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இம்முறை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகள் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்துவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபகசவின் மகன் நமல் ராஜபக்ச இன்று அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 38 வயதான நமல், ராஜபட்சாவின் மூத்த மகனாவார். இவர் லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பயின்றவர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் மூன்று முறை அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x