இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொலை


ஈரான்: புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் ஈரான் சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 1 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியே கடந்த 1987-ம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்த நிலையில், தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்று ஹமாஸ் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியே தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர் என்று ஈரானிய புரட்சிப் படைகள் தெரிவித்துள்ளன.

x