நியூயார்க் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: 6 பேர் படுகாயம்


நியூயார்க்: ரோசெஸ்டரில் உள்ள மேப்பிள்வுட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் உள்ள ரோசெஸ்டர் மேம்ப்பிள்வுட் பூங்காவில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டைப் பார்த்த மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், பூங்காவிற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்த இளைஞரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை அல்லது இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை.

அந்த நேரத்தில், எத்தனை பேர் சுடப்பட்டனர் என்பது எங்களுக்குத் தெரியாது என்று ரோசெஸ்டர் போலீஸ் கேப்டன் கிரெக் பெல்லோ கூறினார். மேலும் விவரங்களுக்கு நேரில் கண்ட சாட்சிகளிடம் பேச வேண்டும் என்றார். இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் குறித்த தகவல் அல்லது வீடியோ காட்சிகள் உள்ளவர்கள் 911 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு காவல் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்

x