அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று: வெள்ளை மாளிகை அறிவிப்பு!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லாஸ் வேகாஸில் நடைபெற்ற பிரச்சாரத்தை தொடர்ந்து அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவரது சுவாச செயல்பாடு இயல்பாக உள்ளது. அவரது வெப்பநிலை 97.8 ஆக சாதாரணமாக உள்ளது. அவரது இதய துடிப்பு 97 சதவீதத்தில் இயல்பாக உள்ளது.

பைடனுக்கு பாக்ஸ்லோவிட் மருந்தின் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ரெஹோபோத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்களால் ஜோ பைடன் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோ பைடனின் மருத்துவர் கெவின் ஓ கானர் கூறுகையில், “ ஜோ பைடன் இருமல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகளை கொண்டிருந்தார். முதல் நாள் பிரச்சாரம் நன்றாக இருந்ததாக பைடன் தெரிவித்தார். ஆனால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பிசிஆர் உறுதிபடுத்துதல் சோதனை மட்டும் நிலுவையில் உள்ளது” என்றார்.

“இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் குணமடைய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அதே நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியைத் தொடர்ந்து செய்வேன்” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

x