‘நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்…குற்றச்சாட்டுக்களைச் சந்திக்கத் தயார்’: நமல் ராஜபக்ச


"நானும் எனது தந்தையும் எந்த நாட்டிற்கும் ஓடிப்போகவில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களைச் சந்திக்க தயாராக உள்ளோம்" என மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார பேரழிவிற்கு காரணமான மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது மகிந்தாவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன் மாளிகையில் இருந்து வெளியேறினார். அவர் தனது குடும்பத்தாருடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிக்கும் நிலையில் மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சவும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், " நானும், எனது தந்தையும் எங்கும் செல்லவில்லை" என ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘’கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். எனது தந்தை ராஜபக்சவுக்கோ, எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை. அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக சந்திக்க தயார் ’’ என நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

x