தண்ணீருக்குப் பதிலாக சானிடைசர்: பந்தயத்தில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!


ஜப்பானின் மத்திய மாநிலமான யமானாஷியில் கடந்த வாரம் 5,000 மீட்டர் தொலைவு நடை போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவிகள் அருந்துவதற்காக கோப்பைகளில் தண்ணீர் வைக்கப்பட்ட நிலையில், சில கோப்பைகளில் தவறுதலாக சானிடைசர் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது.

அதைக் கவனிக்காத மூன்று பள்ளி மாணவிகள் அதை அருந்திவிட்டு பந்தயத்தில் கலந்துகொள்ளத் தயாரானார்கள். அப்போது ஒரு மாணவி வாந்தி எடுத்தார். களைப்படைந்த அந்த மாணவி போட்டியிலிருந்து விலகிய நிலையில், மற்ற இருவரும் அருந்திக்கொண்டிருந்த சானிடைசரை உடனே துப்பிவிட்டு போட்டியில் கலந்துகொண்டனர். பின்னர் மூவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூவரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எப்படி நிகழ்ந்தது?

தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியில், லேபிள் ஒட்டப்படாத பாட்டில்களில் சானிடைசர் ஊற்றப்பட்டிருந்ததாக யமானாஷியின் மேல்நிலைப் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டி கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கரோனா பரவல் தொடங்கிய பின்னர் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் சானிடைசர்கள் ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

x