`தங்களது நல்லெண்ணத்துக்கு நன்றி'- முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ராஜபக்ச கடிதம்


இலங்கை மக்களுக்கு தமிழக அரசு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் ராஜபக்ச கடிதம் எழுதியுள்ளார்.

திரு மு.க.ஸ்டாலின் அவர்களே என்று கடிதத்தில் குறிபிட்டுள்ள இலங்கை பிரதமர் ராஜபக்ச, "தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.

இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களுக்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

x