உக்ரைன் போரில் உயிரிழந்த ‘கீவின் பிசாசு’!


மேற்கு உக்ரைனில் உள்ள கோரோலிவ்கா எனும் கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் மனதெல்லாம் நிறைந்தது விமானம் பற்றிய கனவுகள்தான். எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்று விரும்பிய அந்தச் சிறுவன், பின்னாட்களில் ‘கீவின் பிசாசு’ என்று அழைக்கப்படும் அளவுக்குப் புகழ்பெற்ற போர் விமானியாக உருவெடுத்தான்.

ஆம், பிப்ரவரி 24-ல் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய நிலையில், அன்றைய தினமே தனது மிக்-29 விமானத்தில் பறந்தபடி 10 ரஷ்யப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினார் மேஜர் ஸ்டீபன் தாராபல்கா எனும் அந்தப் போர் விமானி. 29 வயதான தாராபல்காவுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தப் போரில் மொத்தம் 40 ரஷ்ய விமானங்களை அவர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். ‘மக்கள் ‘கீவின் பிசாசு’ (Ghost Of Kyiv) என அவரை அழைக்கின்றனர். அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர்’ எனக் கடந்த மாதம் உக்ரைன் அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டியிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் அவர் ரஷ்யத் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவலை டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. முதலில் கீவின் பிசாசு என்று மட்டுமே அறியப்பட்டிருந்த நிலையில், அவரது முழுப் பெயர், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை அந்நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

மார்ச் 13-ம் தேதி, ரஷ்யப் படையினர் அவரது மிக்-29 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகக் குறிப்பிட்டிருக்கும் அந்நாளிதழ், வீரதீரச் செயல்களுக்காக உக்ரைன் அரசு வழங்கும் உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் தி கோல்டன் ஸ்டார்’ எனும் விருது, அவரது மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

அவர் பயன்படுத்திய தலைக்கவசம், குளிர் கண்ணாடி ஆகியவை லண்டனில் ஏலத்தில் விடப்படவிருக்கின்றன. அதேசமயம், அவரது மரணம் குறித்து தங்களுக்குத் தகவல் அளிக்கப்படவில்லை என அவரது பெற்றோர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x