ராணுவ வீரர்கள் அல்ல... ரட்சகர்கள்!


தெற்கு சூடானில் ஐநாவின் சார்பில் அமைதிப் பணியாற்றிவரும் படையைச் (யூஎன்எம்ஐஎஸ்எஸ்) சேர்ந்த 1,100 இந்திய வீரர்களுக்கு ஐநா விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தெற்கு சூடானில் இந்திய வீரர்கள் ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் இந்த கவுரவத்தை ஐநா அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

ஐநா அமைதிக் குழுக்களில் ருவாண்டாவுக்கு அடுத்தபடியாக அதிகமான வீரர்களை பங்கேற்கச் செய்திருக்கும் நாடு இந்தியா தான். தற்போது, அந்தக் குழுக்களில் 2,385 இந்திய வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். காவல் துறையைச் சேர்ந்த 30 இந்தியர்களும் யூஎன்எம்ஐஎஸ்எஸ் படையில் பணியாற்றுகிறார்கள்.

அந்த வகையில், வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழும் கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் அப்பர் நைல் மாநிலத்தில் 1,160 இந்திய வீரர்கள் அமைதிப் பணியாற்றிவருகிறார்கள்.

இந்நிலையில், பன்முகத்தன்மை கொண்ட பணிகளில் மிகச் சிறப்பான சேவையை வழங்கியதாகப் பாராட்டி அவர்களுக்குப் பதக்கமும் விருது வழங்கியிருக்கிறது ஐநா.

மக்களைக் காக்கும் பணி மட்டுமல்ல, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவ சேவை அளிப்பது, சாலைகளைச் சீரமைப்பது, சிறுவர், சிறுமியருக்குக் கணினி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டுவருவதாக இந்திய வீரர்களை யூஎன்எம்ஐஎஸ்எஸ் பாராட்டியிருக்கிறது.

x