சிஇஓ-க்களின் வரிசையில் இன்னொரு இந்தியர்


ராஜ் சுப்பிரமணியம்

அமெரிக்காவிலிருந்து செயல்படும் பன்னாட்டு கூரியர் நிறுவனமான ஃபெடெக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் சுப்பிரமணியம் பொறுப்பேற்கவிருக்கிறார். இந்தத் தகவலை ஃபெடெக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவாகப் பொறுப்புவகித்த ஃப்ரெடெரிக் டபிள்யூ ஸ்மித், ஜூன் 1-ல் பதவி விலகுகிறார். 1971-ல் இந்நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திய அவர், இனி இந்நிறுவனத்தின் செயல் தலைவராக இருப்பார்.

“ராஜ் சுப்பிரமணியத்தின் தலைமையில் ஃபெடெக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படும் எனும் திருப்திகரமான எண்ணம் எனக்கு உண்டு” என ஃப்ரெடெரிக் டபிள்யூ ஸ்மித் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக 2020-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ் சுப்பிரமணியம். தற்போது சிஇஓ-வாக இயர்ந்த நிலையில் தனது இயக்குநர் பொறுப்பிலும் அவர் தொடர்வார் என ஃபெடெக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ராஜ் சுப்பிரமணியம் இதற்கு முன்னர் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சிஇஓ எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

டென்னிஸீ மாநிலத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் சர்வதேசக் கிளைகளில், மொத்தம் 6 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

x