80 வயதைக் கடந்தவர்களுக்கு 4-வது டோஸ் தடுப்பூசி: பிரான்ஸ் அறிவிப்பு


பிரான்ஸில் கரோனா பரவலைத் தடுக்க திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி ‘பாஸ்’ கட்டாயமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அந்த பாஸ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாளை முதல் அந்த நடைமுறை கைவிடப்படுகிறது.

அதேசமயம், மருத்துவமனை அல்லது முதியோர் இல்லத்துக்குச் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி பாஸ் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கலாம் என்றும், பணியிடங்களிலோ பள்ளிகளிலோ முகக்கவசம் கட்டாயம் அல்ல என்றும் பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.

ஒருபக்கம் இப்படி தளர்வுகளை அறிவித்திருக்கும் பிரான்ஸ் அரசு, மறுபுறம் 80 வயதைக் கடந்தவர்களுக்கு 4-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறது. பூஸ்டர் டோஸ் போடப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர் 4-வது தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம் என பிரான்ஸ் பிரதமர் ழான் கேஸ்டெக்ஸ் அறிவித்திருக்கிறார்.

x