ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு!


உக்ரைன் போரில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கார்கிவ் நகரில் இன்று காலை ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

மாணவர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்வீட் செய்திருக்கிறார்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில், அரசுக் கட்டிடங்கள், குடியிருப்புகள், பள்ளிகள் என ஏராளமான கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இன்று காலைதான் வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

x