பிரான்ஸில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!


பிப்ரவரி 18 முதல் 20 வரை ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஜெய்சங்கர், நேற்று பிரன்ஸ் சென்றடைந்தார்.

மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருக்கும் அவர், அந்நாட்டின் தலைநகர் பாரிஸில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ழான் ஈவ்ஸ் லெ டெரியானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு, இந்தோ - பசிபி பிராந்திய நிலவரம், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்த ஜெய்சங்கர், “இருதரப்பு ஒத்துழைப்பு, உக்ரைன் நிலவரம், இந்தோ - பசிபிக் நிலவரம், விரிவான கூட்டு செயல் திட்டம் (ஜேசிபிஓஏ) குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தோ - பசிபிக் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றியது குறித்து இருவரும் பெருமிதம் தெரிவித்தனர். வர்த்தம், முதலீடு. பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், எரிசக்தி, பருவநிலை மாற்றம் குறித்தும் ஒருங்கிணைந்த வியூகம் வகுப்பது தொடர்பாக இருவரும் பேசினர் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

x