தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது


வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் இருந்து அமிர்தலிங்கம் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 29-ம் தேதி, அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, செல்வம், மணிகண்டன், தேவா, ஹரி, குணால், வெற்றி, ஆறுமுகம், அமிர்தலிங்கம் ஆகிய 12 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, எல்லைதாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் வழிமறித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதேபோல், சிவக்குமார் மனைவி குமாரி என்பவருக்குச் சொந்தமான படகில் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்களையும் நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இது நாகை மற்றும் காரைக்கால் மீனவர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது

கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மாவட்டம், மயிலாட்டி என்ற இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப்பின் மீனவர்கள் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

x