கடலுக்கு அடியில் வெடித்துச் சிதறிய எரிமலையால் சுனாமி... அழிந்துபோன தீவு!


டோங்கோ நாடு

டோங்கோ நாட்டில் உள்ள ஒரு தீவில் கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமியால் ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு லட்சம் மக்கள் தொகையுடன் பசுபிக் பெருகடலில் அமைந்துள்ளது டோங்கோ நாடு. பல்வேறு தீவுகள் கொண்ட இந்த நாட்டில், சில தீவுகளில் எரிமலைகள் இருக்கின்றன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இதனிடையே, இந்த நாட்டில் பெரும்பகுதி கடலுக்குள் உள்ள ஹுங்கா டோங்கோ என்ற எரிமலை கடந்த 15-ம் தேதி திடீரென வெடித்து சிதறியது. இதனால், கடலில் சுனாமி ஏற்பட்டது. சுனாமி அலைகள் டோங்கோ நாட்டின் பல்வேறு தீவுகளுக்குள் புகுந்தன.

எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவு ஆகியவை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. மொத்த மக்கள் தொகை 50 பேர் கொண்ட மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமாகின. ஃப்னொய்புவா தீவில் இரண்டு வீடுகள் தவிர எஞ்சிய வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின.

இந்த எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக டோங்கோ அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சுனாமி தாக்கிய பல்வேறு தீவுகள் வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், பேரழிவிற்கு பின்னர் உணவு, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் டோங்கோ நாட்டிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

x