முடிவுக்கு வருகிறதா, மூன்றாம் அலை எழுகிறதா?


கரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த புதிய வீரிய வகையின் தீவிரப் பரவலால், உலக நாடுகள் மீண்டும் பெருந்தொற்று அச்சத்துக்கு ஆளாகி வருகின்றன. இந்தியாவில் கரோனா உயிர்ப் பலிகள் குறைந்துவரும் வேளையில், இந்தப் புதிய வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பண்டிகை, பருவ மழை, பள்ளி திறப்பு என வைரஸ் பரவலுக்கு வாய்ப்பளிக்கும் சவால்களுக்கும் குறைவில்லை. இவற்றின் மத்தியில், கரோனா முடிவை எட்டுமா அல்லது 3-ம் பேரலையாக எழுமா என்ற கேள்வி மட்டும் பூதாகரமாய் தொக்கி நிற்கிறது.

இயல்புக்குத் திரும்பிய உலகம்

கரோனா தொற்றுப் பரவல் அதிகமானபோது அதைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக நாடுகள் தனிமனித இடைவெளி, ஊரடங்கு, பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை ஆகியவற்றை விதித்தன. வீட்டிலிருந்தே பணியாற்றவும், கல்வி கற்கவும் ஏற்பாடானது. இப்படி பரவல் சங்கிலியின் கண்ணிகளை நொறுக்கியதாலும், முழுவீச்சில் மக்களைச் சென்றடைந்த தடுப்பூசிகளாலும் உலகம் பெருந்தொற்றிலிருந்து மீளத் தொடங்கியது.

அதன் விளைவாகப் பொதுப் போக்குவரத்து, ஆன்மிகத் தலங்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் ஆகியவை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 20 மாதங்கள் இடைவெளியில் மீண்டும் உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறது. இந்தச் சூழலில்தான் மீண்டும் பெருந்தொற்றின் பெயரைப் பல்வேறு நாடுகளும் பதற்றத்தோடு உச்சரிக்க ஆரம்பித்திருக்கின்றன.

’எண்ட் கார்டு’ எப்போது?

தொற்றின் பரவல் வீதம் எகிறியிருப்பதை வைத்து, இதுதான் 3-ம் அலையா எனக் கேள்விகள் கிளம்பியிருக்கின்றன. தடுப்பூசிகள் முழுமையாகச் சென்று சேராத 3-ம் உலக நாடுகள் மட்டுமன்றி, ஊசிகளை உருவாக்கிய பிரிட்டன், சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் தொற்றுப் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இந்த நாடுகள், தடுப்பூசி டோஸ்கள் மட்டுமன்றி, கூடுதலாக பூஸ்டர் டோஸையும் வழங்கி மக்களின் பூரண பாதுகாப்பை உறுதி செய்திருப்பவை. அவற்றையும் மீறி அதிகரிக்கும் கரோனா பரவல், மருத்துவ ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதன் விளைவாக, 3-ம் அலைக்கு அவசியமின்றி பெருந்தொற்றுப் பரவல் முடிவுக்கு வந்துவிடும் என்ற கணிப்புகள் பொய்த்திருக்கின்றன. தொடர்ந்து உதயமாகும் வைரஸ் பிறழ்வுகள், பயணங்கள் மூலம் உலகின் இன்னொரு மூலைக்கு அதைப் பரப்பும் மனிதர்கள் என கரோனா கடிவாளம் இழந்திருக்கிறது. 3-ம் அலை என்றில்லை... 4, 5 என கரோனா அலைகள் சிறிதாகவோ பெரிதாகவோ கடலலை போல அடித்துக்கொண்டேதான் இருக்கும். உடல்நலத்தைப் பாதிப்பதிலும், பரவும் வேகத்திலும் மாறுபடலாமே தவிர, இப்போதைக்குக் கரோனாவுக்கு ’எண்ட் கார்டு’ இல்லை என்பது கசப்பான உண்மை. இந்த நிதர்சனத்தை உள்வாங்கிக்கொள்வது நம்மை உஷாராக வழி நடத்தவும் உதவும்.

உருமாறிய புதிய ரகம்

அண்மை நிலவரப்படி, கரோனாவின் புதிய உருமாறிய ரகமான ஏஒய்.4.2 வைரஸால் ரஷ்யா, இஸ்ரேல், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவின் பல மாகாணங்கள் மீண்டும் பொதுமுடக்கத்துக்கு ஆளாகி உள்ளன. இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் மகாராஷ்டிராவின் சில இடங்களிலும் இந்த உருமாறிய ரகத்தின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, பிரிட்டனில் பெருந்தொற்றுப் பரவலை மீண்டும் அதிகரிக்கக் காரணமான கரோன டெல்டா வைரஸின் துணை வகை என்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தனது ஆய்வைத் தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்டா வகையின் கோரத்தாண்டவம் தொடங்கியது என்றால், அதிலிருந்து பிறழ்வுற்ற ஏஒய்.4.2 வைரஸின் வருகை இந்த அக்டோபரில் தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸ், இந்தியா போன்று சுமார் 45 உலக நாடுகளில் பரவலின் தொடக்க நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை, முந்தைய ரகங்களைவிட தற்போதைய வைரஸின் பரவல் வேகம் மிகவும் அதிகம் என்கிறது.

தடுப்பூசி மற்றும் பூஸ்டர்

பரவல் வேகம் அதிகமாக இருப்பதால், கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரம், தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்குக் காரணம், தடுப்பூசிகள்! தடுப்பூசியிலும்கூட முழுமையான டோஸ்கள், கூடுதலாக பூஸ்டர் என எடுத்துக்கொள்வதே உயிரைக் காக்கும்.

இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் 100 கோடி இலக்கை எட்டியிருப்பினும், நமது மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையிலும், 2 டோஸ்களின் எண்ணிக்கையிலும் நாம் போக வேண்டிய தொலைவு இன்னும் அதிகம். கேரளா போன்ற மாநிலங்களில் 2 டோஸ்களையும் முழுமையாக எடுத்துக்கொண்ட மக்களில் ஆயிரக்கணக்கானோருக்குக் கரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்கவே, எடுத்துக்கொண்ட தடுப்பூசிகளின் வீரியம் குறிப்பிட்ட மாதங்களுக்குப் பின்னர் குறைவதாகவும், புதிய உருமாறிய ரகங்களை எதிர்ப்பதில் அவற்றின் செயல்பாடு தடுமாறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், தடுப்பூசி டோஸ்களுக்கு அப்பால் உலக நாடுகள் வலியுறுத்தும் பூஸ்டர் டோஸ் இந்தியாவில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. 2-18 வயதுக்கு இடையிலான குழந்தைகள், சிறார்களுக்கான தடுப்பூசியும் முழுவீச்சில் தொடங்கப்படவில்லை. இவையனைத்தும் நாம் பெருந்தொற்று முற்றுகையில் நீடிக்கிறோம் என்பதை உணர்த்துபவை.

பண்டிகை, பருவமழை, பள்ளிக்கூடம்

பண்டிகைகளை முன்னிட்டு பயணங்கள், கடைகளில் பொருட்களை வாங்குவது என்று எங்கும் மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. மேலும், பருவமழை தொடங்கியிருப்பது, அதற்கே உரிய உடல்நல பாதிப்புகளாகக் கரோனாவுக்கு நிகரான அறிகுறிகளைக் காட்டும். அறிகுறிகளின் அடிப்படையில் சாதாரண காய்ச்சலில் இருந்து டெங்கு மற்றும் கரோனா காய்ச்சல்களைப் பிரித்து உணர்வது கடினம். இவற்றுக்கு அஞ்சுவது, அலட்சியமாக இருப்பது என இரண்டுமே நம்மை இடறக் கூடியவை. எனவே, பருவ மழையிடம் இருந்தும் இம்முறை கூடுதல் கவனம் பேண வேண்டியதாகிறது.

தடுப்பூசிகள் இன்னமும் சென்று சேராத, நோய் எதிர்ப்புச் சக்தியில் குறைந்த குழந்தைகள், முழு எண்ணிக்கையில் பள்ளிகளுக்குச் செல்ல உள்ளார்கள். பள்ளி திறந்ததுமே குழந்தைகளை அனுப்புவது அவசியமல்ல என்று கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. பண்டிகைக் காலத்தில் தொற்றின் பரவல் அதிகரிக்கும் என்பதால், வசிப்பிடங்களின் பரவல் மற்றும் பாதிப்பைப் பொறுத்து தங்கள் குழந்தைகளை உடனடியாகப் பள்ளிக்கு அனுப்புவது குறித்து பெற்றோர் முடிவெடுக்கலாம்.

பொறுப்பை உணர்வோம்

சர்வதேச அளவிலான பெருந்தொற்றுப் பரவலை கணித்து வரும் ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின்’ ஆய்வு, வரும் நாட்களில் இந்தியாவில் தொற்று எகிறும் என்கிறது. புதிய வீரிய வகைத் தொற்றின் இருப்பை முழுவீச்சில் ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் முன்னுள்ள பெரும் சவாலாக வளர்ந்திருக்கிறது. அதற்கு உதவும் வகையில் பொதுமக்களாகிய நாமும் பண்டிகை, பருவ மழை, பள்ளி திறப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு, குழந்தைகள், முதியோர், இணை நோயர்கள் என அனைவரின் உடல் நலனையும் பொறுப்புடன் பேணிக் காப்பது இப்போதைக்கு மிக முக்கியமாகும்.

வேகமாகப் பரவும் புதிய உருமாறிய வைரஸால் இன்னொரு பெருந்தொற்று அலையில் நாடு மூழ்காதிருப்பது பொதுமக்களாகிய நம் கையில் இருக்கிறது. இதை உள்வாங்கிக் கொண்டால், பண்டிகை மேலும் இனிக்கும்; பருவ மழையால் பெறும் செழிப்பும் அர்த்தமுள்ளதாகும்!

பெட்டிச் செய்தி

நித்தம் பிறழும் வைரஸ்

பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட ஆல்பா, தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா, பிரேசிலில் புலப்பட்ட காமா என கரோனா வைரஸின் ஆரம்ப உருமாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்து வகைப்படுத்தினார்கள். இந்த வரிசையில் இந்தியாவில் கண்டறிப்பட்ட டெல்டா வகை, பிரிட்டன், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரித்த கரோனா உயிரிழப்புகளுக்கு காரணமானது. இதுதவிர ’மியு’ என்ற ரகம் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டது. பரவல் வேகம், உருவாக்கும் உடல்நல பாதிப்புகள், உயிருக்கான ஆபத்துகளைப் பொறுத்து இந்த வைரஸ்கள் கவனம் பெறுகின்றன அல்லது புறந்தள்ளப்படுகின்றன.

கணந்தோறும் பிறழ் மாற்றங்களுக்கு ஆளாகும் வைரஸ் ரகங்கள் ஜீனோம் தொடர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அங்கே இந்தப் பிறழ்வுகள், அனைத்து மாதிரிகளிலும் பொதுவானதாக அடையாளம் காணப்படும்போது, புதிய ரகம் உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் பிரிட்டனைப் படுத்தி எடுத்துவிட்டு இந்தியாவில் தலையெடுத்திருக்கும், ஏஒய்.4.2 ரகத்துடன் ஏ222வி, ஒய்145எச், ஏ2529வி எனக் கூடுதலாக மூன்றும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மூன்றில் முதல் இரண்டும் ஏஒய்.4.2-க்கு இணையாகப் பரவும் வேகம் கொண்டது. ஆனபோதும், ஏஒய்.2.4 மட்டுமே அதன் அச்சுறுத்தும் அளவிலான பரவலால் கவனம் பெற்றுள்ளது.

x