பள்ளியில் பாய் விரித்து படுத்து உறங்கிய ஆசிரியை: வைரலான வீடியோவால் சஸ்பெண்ட்


அலிகார்: பள்ளியில் ஆசிரியை ஒருவர் பாய் விரித்து படுத்து உறங்கியுள்ளார். அவருக்கு மாணவிகள் விசிறியால் வீசிறிவிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் தானிபூர் பகுதியில் உள்ள கோகுல்பூரில் ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் தரையில் பாய் விரித்து படுத்திருக்கிறார். அவரை சுற்றி மூன்று மாணவிகள் விசிறியால் வீசி விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் அந்த ஆசிரியைக்கு எதிரான கண்டனங்களும் வலுத்து வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து பள்ளி ஆசிரியை டிம்பிள் பன்சால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் ராகேஷ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை பள்ளியில் பாய் விரித்து படுத்து உறங்கிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

x