வெப்ப அலையில் இருந்து தப்பிக்க ஸ்கூட்டரில் ஷவர்: ஜோத்பூர் இளைஞரின் வீடியோ வைரல்


வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் மக்களை மிகவும் வாட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த 1951-ம் வருடத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பத்தை வடமேற்கு இந்தியா சந்தித்து வருகிறது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். வாகனத்தில் வெளியே செல்லும்போது வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஃபன் வித் சிங்’ என்ற பயனரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், "தனது ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் ஒருவர் அதில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக ஷவரில் நனைந்தபடி இருப்பது தெரிகிறது. தொடர்ந்து காட்டப்படும் வீடியோவில் கேமரா திரும்ப, ஸ்கூட்டரின் முன்புறத்தில் நீலநிற தண்ணீர் கேனுடன் பைப்கள் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் தற்காலிக ஷவரின் மேக்‌ஷிப்ட்டர் அமைப்பு காட்டப்படுகிறது.

உச்சியில் இருந்து விழும் நீர் துளிகளில் நனைந்தபடி அந்த மனிதர் தனது பயணத்தை ரசிக்க, அவரை பலர் வேடிக்கையாக பார்க்கின்றனர். சில அந்தக் காட்சியை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கின்றனர். ஜூன் 2-ம் தேதி இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதுவரை அதனை 22 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோ குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பயனர் ஒருவர், "இந்த யோசனை இந்தியாவை விட்டு வெளியேச் செல்லக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார். இரண்டாமவர், "மனிதன் கலக்குகிறார், மக்கள் அதிர்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். மூன்றாமவர், "அவர் ஒரு லெஜண்ட்" என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், "வெப்ப அலையை விரட்ட சிறந்த யோசனை" என்றும், ஐந்தாவது பயனர், "மிகச் சிறப்பான யோசனை" என்றும் தெரிவித்துள்ளனர்.