சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக சொன்னார் என்று திட்டமிட்டு ஒரு பொய் செய்தியைப் பரப்புகிறார்கள். நான் எந்த நேரத்திலும் அந்த மாதிரி சொல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''திருமாவளவன் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக சொன்னார் என்று அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். நான் எந்த நேரத்திலும் அந்த மாதிரி சொல்லவில்லை. திட்டமிட்டு ஒரு பொய் செய்தியைப் பரப்புகிறார்கள்.
இயக்கத்தில் இருந்து விலகுவதாக நான் எப்போது சொன்னேன். நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த செய்தியை வேண்டுமென்று சமூக வலைத்தளங்களில் நான்கு நாட்களாக ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள். மீம்ஸ் போடுவது, கார்டு போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு வகையில் என்னால் யூடியூபர்களுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை எங்கள் குடும்பம் திராவிட குடும்பம். 75 ஆண்டுகால நீண்டநெடிய திராவிட பாரம்பரியம் கொண்டது எங்கள் குடும்பம். பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. அதிமுக எங்களை அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. உலகம் முழுக்க என்னை தெரிகிறது என்றால் அதற்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான். எனவே வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் என்னுடைய பயணம் தொடரும்'' என்றார்.