அதிமுகவை பழனிசாமி அடமானம் வைத்துவிட்டார்: பெங்களூரு புகழேந்தி வேதனை


சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி.

பாஜக- அதிமுக கூட்டணி, அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது, என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், பாஜக-வுடன் இனி கூட்டணி கிடையாது. பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றுவிட்டோம் என பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் தெரிவித்தனர். அதிமுக-வை ஊழல் ஆட்சி என்று கூறியவர் அமித்ஷா.

இந்நிலையில், டெல்லியில் அதிமுக அலுவலகத்தை பார்வையிடச் சென்றதாக கூறிய பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஆறு மாதங்கள் கழித்து தான் கூட்டணி குறித்து கூறுவோம்’ என்றார். ஆனால், அமித்ஷா சென்னை வந்ததும், பாஜக-அதிமுக கூட்டணியை பழனிசாமி அறிவித்துவிட்டார்.

ஜெயலலிதா இருந்தபோது, ‘பாஜக-வுடன் கூட்டணி வைத்து, ஒருமுறை தவறு செய்துவிட்டேன். இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்’ என்றார். ஆனால், அதிமுகவை பழனிசாமி அடமானம் வைத்துவிட்டார். கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றால், மஹாராஷ்டிராவின் ஷிண்டே நிலை தான் பழனிசாமிக்கு ஏற்படும். இனி அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிடையாது.

ஓபிஎஸ்-ஐ நம்பி நாங்கள் வீணாகப் போய்விட்டோம். வீட்டிலேயே அமர்ந்து கொண்டு, ‘அதிமுக ஒருங்கிணைக்கப்படும், ஆட்சி அமைக்கும்’ என்று சசிகலா சொல்லி வந்தார். வரும் ஆண்டிலும் அதைத் தான் கூறுவார். பெயர் சொல்ல விரும்பாத ஒருவரும் அதிமுகவுக்கு எதையும் செய்யவில்லை. அதிமுக கூட்டணி அறிவிக்கப்பட்டபோது, அந்த இடத்திலேயே செங்கோட்டையன் இல்லை. பாஜக- அதிமுக கூட்டணி மீது, மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இனி யாரையும் நம்பி, அதிமுக தொண்டர்கள் இல்லை. கொடி எடுக்கும் தொண்டர்கள், முடிவெடுப்பார்கள் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்து பணியாற்ற உள்ளனர். இதில், அதிமுக-வின் தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என அனைவரும் ஒன்று சேர்வர், புரட்சி வெடிக்கும். எம்ஜிஆர் அம்மா ஆட்சி அமைப்போம், என்றார்

x