மதபோதகர் ஜான் ஜெபராஜ் மூணாறில் கைது: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் அதிரடி!


கோவை: கோவையில் சிறுமிகளுக்கு தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கேரளா மாநிலம் மூணாறில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஜி.என்.மில்ஸ் உழைப்பாளர் காலனியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ்(37). இவர், கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ ஜெபக் கூடத்தில், மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் வீட்டில் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் ஒரு விழா நடந்தது. அந்த விழாவுக்கு வந்திருந்த 17 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளுக்கு ஜான்ஜெபராஜ் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டியதால், அச்சிறுமிகளும் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்த தகவல் கோவை சைல்டு லைன் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் கோவை மாநகர காவல்துறையின், மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிந்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

x