சேலம்: பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் ஆக. 15, 16, 17, 18-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் தேசிய தலைவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அரசு பின்பற்றக்கூடிய கொள்கைகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய சட்டங்கள் போன்றவை, நாடு ஆபத்தை நோக்கிச் செல்வதை உணர்த்துகின்றன. தேசிய கல்விக் கொள்கை என்பது 90 சதவீத மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டமாகும். இது வெறும் மொழிப் பிரச்சினை, பணப் பிரச்சினை அல்ல; கல்வியே இல்லாமல் செய்யும் முயற்சியாகும்.
‘ஒரே நாடு ஒரே தேர்தலின்’ நோக்கம் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதுதான். வக்பு வாரிய சட்டம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். இதை நிறைவேற்றிய தினத்தை கருப்பு தினமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. பாஜகவின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், சில கட்சிகள் அவர்களிடம் சிக்கியுள்ளன.
அதிகாரம், பண பலம், மிரட்டலால் அனைத்துக் கட்சிகளையும் அழிக்க நினைக்கிறது பாஜக. அதன் உத்தரவுக்கு அதிமுக கட்டுப்படவில்லை என்றால், கட்சியின் பொதுச் செயலாளர் மாற்றப்படுவார் என்று மிரட்டும் சூழல் நிலவுகிறது. பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பணிந்து செல்லும் நிலையில் உள்ளது.
இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, கச்சத்தீவை மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் பேசினாரா, அதற்கான உத்தரவாதத்தை பெற்றாரா என்று தெரிய வேண்டும். அதேபோல, எதிர்காலத்தில் படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது இருக்காது என்ற உத்தரவாதத்தை அவர் பெற்றுத் தருவாரா என்பதும் கேள்விக்குறிதான். இவ்வாறு முத்தரசன் கூறினார்.