61 நாட்கள் அமலில் இருக்கும் மீன்பிடி தடைக்காலம்: ஏப். 15-ம் தேதி தொடக்கம்


சென்னை: நடப்பாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. வரும் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தப்படும்.

மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர்.

மீன்பிடித்தடை காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு மீன்கள் மற்றும் இறைச்சின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த மீன்பிடித் தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது “கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பருவ மழை தொடங்கும் நேரத்தில்தான் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு மாறாக மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், தற்போது மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டும் வரும் நிவராணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்” என்றனர்.

x