நீலகிரியில் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலை ரூ.19.08: இந்திய தேயிலை வாரியம் உத்தரவு


நீலகிரி: பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.19.08 என விலை நிர்ணயம் செய்து இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கான விலை நிர்ணயத்தை இந்திய தேயிலை வாரியம் மாத இறுதியில் வெளியிடுவது வழக்கம். அதன்படி மார்ச் மாதம் தேயிலைத் தொழிற் சாலைகள் கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.19.08 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின், ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையை தேயிலைத் தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்குகிறதா? என்பதை தேயிலை வாரியத்தால் அமைக்கப் பட்டுள்ள குழு கண்காணிக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x