சென்னை: இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள், படகுகளை மீட்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்.2-ம் தேதி, கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலி்ன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏப்.2-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தம் (கச்சத்தீவு ஒப்பந்தம்) தான் நீடிக்கும் இப்பிரச்சினைக்கு அடிப்படையாக உள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளது,.1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாடாளுமன்றத்தில் அப்போது தமிழக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த 1974 ஜூன் 28-ம் தேதி மாநில அரசின் இசைவின்றி கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்ட பிறகு, அப்போதைய முதல்வர் கருணாநிதி, மறுநாளே தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி, அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அதைத்தொடர்ந்து, கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை வன்மையாக எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில், 1974-ம் ஆண்டு ஆக.21-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி, 1991 அக்.3, 2013 மே 3 மற்றும் 2014 டிச 5-ம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவையில் இதேபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நமது மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவர்களின் படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினர் மிகுந்த கவலையிலும், துயரத்திலும் உள்ளனர். கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்களின் வாழ்வாதாரமும் நிலையற்றதாக மாறியுள்ளது.
முதல்வராக நான் பதவியேற்ற பின், தங்களுடன் கடந்த 2021 ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற முதல் சந்திப்பின் போதும், தங்கள் கவனத்துக்கு இப்பிரச்சினையைக் கொண்டுவந்தேன். இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற தமிழக அரசின் முந்தைய கோரிக்கைகளை அடுத்தடுத்த சந்திப்பின் போதும் வலியுறுத்தியுள்ளேன். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது குறித்து 2021-ம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், தங்களுக்கும் பலமுறை கடிதங்கள் எழுதியுள்ளேன்.
இந்நிலையில், 2024-ம் ஆண்டில், 530 மீனவர்கள், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில், 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நமது மீனவர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனையும், பெருந்தொகையும் அபராதமாக விதிக்கப்படுவதோடு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்துக்கு விடப்படுகிறது.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு ஒரே வழி கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான். இந்த தொடர் கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். எனவே, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறு ஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
அரசுமுறை பயணமாக இலங்கை செல்லும் தாங்கள், இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் கடந்த ஏப்.2-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.