நீலகிரி: உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைச் சாவடியில் நேற்று அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், இ-பாஸ் பதிவு செய்து இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் நீலகிரி மாவட்டத்துக்கு செல்ல முக்கிய வழித்தடமாக உள்ளது. மேட்டுப்பாளையம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் நீலகிரிக்கு சென்று வருகின்றன.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு பகுதியில் உள்ள இ-பாஸ் சோதனைச் சாவடியில், நீலகிரி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என நேற்று முதல் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்லாறு இ-பாஸ் சோதனைச் சாவடியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, "தினமும் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.
அரசு பேருந்து, ஆம்புலன்ஸ் வாகனம், சரக்கு வாகனங்கள், நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ-பாஸ் தேவையில்லை. தற்போது வரை 2,500 வாகனங்கள் வந்துள்ளன. இந்த நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம்.
இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி முறையில், செக் செய்யும் வகையில் இந்த பூம் பேரியர் அமைய உள்ளது. அடுத்த வாரம் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது, ஊழியர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற சோதனைச்சாவடிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்" என்றார்.