வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க மே 15 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் தகவல்


கோவை: மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன் படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42(பி)-ன் படியும் வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 13-ன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.

இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகள் என 5:3:2 என்ற விகிதாச்சாரப்படி அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனர். இக்குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மே 15-ம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நடப்பாண்டு மே 15-ம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இத்தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன், அபராதத்தை தவிர்க்கவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x