திருப்பத்தூர்: இரட்டை இலை இருக்குமா ? இருக்காதா ? அதிமுகவில் பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா ? முடியாதா ? இதையெல்லாம் சரி செய்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்று உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நிதி வழங்காமல் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. கொள்கை ரீதியாக அதிமுகவும், பாஜகவும் ஒன்று சேர முடியாது.
மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் எதற்காக நிர்பந்தம் செய்ய வேண்டும் ? கொடநாடு வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை இருக்குமா ? இருக்காதா ? அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா ? முடியாதா ? இதையெல்லாம் சரி செய்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தொடரும் குற்ற சம்பவங்களை முழுமையாக தடுக்க உளவுத் துறையை வலுப்படுத்த வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.