திருநெல்வேலி: அம்பாசமுத்திரம், நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருந்தது. இரவு நேரங்களில் அப்பகுதியில் கரடி சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கரடியை பிடித்து, வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து, கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் வனத்துறை வைத்த கூண்டில் கரடி சிக்கியது. கரடியை மீட்ட வனத்துறையினர், அதனை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விடுவித்தனர்.