கரூர்: சீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தென்னரசு (16). இவர் ஏமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், மார்ச் 27ம் தேதி கரூர் திண்ணப்பா நகர் அருகேயுள்ள பெண்கள் உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
புலியூர் அருகே சென்றபோது, சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கிளை முறிந்து தென்னரசு மீது விழுந்தது. இதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தென்னரசு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 3 நாட்களாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தென்னரசு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து பசுபதி பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.