பாம்பன் கால்வாயை தூர்வார மண் பரிசோதனை தொடக்கம்: ஐஐடி நிபுணர் குழு ஆய்வு


பாம்பன் கால்வாயை தூர்வாருவதற்காக தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலுக்கு அடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் மிகப் பழமையான துறைமுகங்களில் பாம்பன் துறைமுகமும் ஒன்று. 15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையே குதிரையில்கூட பயணம் செய்யும் விதத்தில்தான் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய புயலால் இயற்கையாகவே மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை இடையே பாம்பன் கால்வாய் பெரிதாக உருவானது. மேலும் கால்வாய் மூலம் பாம்பனும், மண்டபமும் துண்டிக்கப்பட்டு தனித் தீவாக ராமேசுவரம் உருவானது.

பாம்பனுக்கு அருகில் உள்ள குருசடை தீவு, கோரி தீவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள நீர்ப்பரப்பிலிருந்து தொடங்கி பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மீ. வரை பாம்பன் கால்வாயின் வழித்தடம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1854-ம் ஆண்டில் முதன்முறையாக 4,400 அடி நீளத்துக்கு பாம்பன் கால்வாய் முதன் முதலாக தூர்வாரப்பட்டது. பின்னர் 1964-ம் ஆண்டு தஷஷ்கோடி புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்களின் போது மணலால் மூடி இந்த பாம்பன் கால்வாய் வழித்தடம் தற்போது 2 மீட்டர் அளவுக்கும் குறைவான ஆழத்துக்குக் குறைந்து விட்டது.

பாம்பன் கால்வாய் மண் நிறைந்து காணப்படுவதால் குறிப்பிட்ட நேரத்தில் கப்பல்கள் கால்வாயைக் கடப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் பல நேரங்களில் கப்பல்களும், படகுகளும் மணலில் சிக்கி விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பாம்பன் கால்வாயைத் தூர்வார வேண்டும் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், பாம்பன் கால்வாயைத் தூர்வாருவதற்காக தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஐஐடி நிபுணர்கள் குழு கடலடியில் மண்ணின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இது குறித்து தமிழக சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது: மன்னார் வளைகுடாவுக்கும், பாக் நீரிணைக்கும் இடையே இயற்கை யாகவே அமைந்த பாம்பன் கால்வாய் வண்டல் படிவு அதிகமாகக் கொண்ட பகுதி. இந்த இடத்தில் கால்வாயின் அகலம் 125 மீட்டராகவும், ஆழம் அதிகபட்சமாக 2.11 மீட்டராகவும் உள்ளது. பாம்பன் கால்வாயை 10 மீட்டர் வரையிலும் தூர்வாரி ஆழப்படுத்தினால் தான் 30 ஆயிரம் டன் வரை எடையுள்ள இலங்கையைச் சுற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள்கூட பாம்பனைக் கடந்து செல்வதுடன் பயண தூரமும் குறையும். இந்த ஆய்வுப் பணி முடிந்து இதன் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர், சாகர் மாலா திட்டத்தில் பாம்பன் கால்வாயைத் தூர்வாருவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கும், என்று கூறினார்.

x