தமிழகம் முழுவதும் கொடிக் கம்பங்களை ஏப்.21-க்குள் அகற்ற வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு


தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வார காலத்தில் அகற்ற வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார். அந்த உத்தரவை நீதிபதி ஜெ. நிஷாபானு தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள கொடிக் கம்பங்களை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். அப்படி அகற்றப்படவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும், எனக்கெடு விதித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்

x