நூறுநாள் வேலைத்திட்ட நிதி ரூ.4,024 கோடியை தராமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் மார்ச் 29-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியி்ட்ட அறிக்கை: கடந்த மார்ச் 9-ம் தேதி நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழ நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை மத்திய அரசிடம் பெற வேண்டும். அத்துடன், மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழகத்துக்கு தரவேண்டிய 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.4,034 கோடியை வழங்காதது குறித்து கேள்வி எழுப்ப வேணடும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்பேரில், நிதி வழங்காதது குறித்து மார்ச் 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அதற்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே, தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித் வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மாவட்ட நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தலைமையில் நடைபெறும் இக்கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும். மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.