ரம்ஜான் பண்டிகைக்காக களைகட்டிய திருப்புவனம் ஆட்டுச் சந்தை; ரூ.2 கோடிக்கு விற்பனை!


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்புவனம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. இதில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று அதிகாலை யில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது. மார்ச் 31ம் தேதி ரம்ஜான் என்பதால் சந்தை களைகட்டியது.

மதுரை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

ஆடுகளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில் ஆடுகளின் விலை அதிகமாக இருந்தது. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ”ரம்ஜான் வருவதை முன்னிட்டு ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூ.2 கோடியை தாண்டியது” என்று கூறினர்.

x