சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளில் சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிறப்பு பரிசுகளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட ஏழு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர். இந்த முன்பதிவு முறையானது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், https://www.tnstc.in, மற்றும் TNSTC Mobile App வழியாக செயல்படுகிறது. தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்யும் வசதியுள்ளது. தினசரி சுமார் 20,000 இருக்கைகள் பயணிகளால் முன்பதிவு செய்யப்படுகின்றன.
பொதுமக்களின் அமோக வரவேற்புடன் செயல்படுகின்ற இத்திட்டத்தினை மேலும் அதிக பயணிகள் பயன்பெறும் வகையில் பிரபலப்படுத்த 2024 ஜனவரி முதல், வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர "குலுக்கல் முறை" மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 2024 முதல் மே 2024 வரை, ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டது. ஜூன் 2024 முதல், ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000-மும், மீதமுள்ள பத்து வெற்றியாளர்களுக்கு ரூ.2,000-மும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000/-மூம், மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000/-ம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 21.11.2024 முதல் 20.01.2025 வரை பயணம் செய்த 3 முன்பதிவு பயணிகள், "சிறப்பு குலுக்கல்" முறையில், தேர்வு செய்யப்பட்டு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பொதுமக்கள் முன்பதிவு வசதியினை மேலும் அதிக அளவில் பயன் படுத்தும் வகையில் இந்தாண்டு கோடை காலத்திற்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில், தேர்வு செய்யப்பட்டு இலவச பயண சலுகை பின்வருமாறு வாங்கப்படும்.
இத்திட்டத்தில் முதல் பரிசு 25 பேருக்கு வழங்கப்படும். அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில். முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 20 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை)
இரண்டாவது பரிசு 25 பேருக்கு வழங்கப்படும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில். முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 10 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை)
மூன்றாவது பரிசு 25 பேருக்கு வழங்கப்படும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழப்பேருந்துகளில். முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்திற்கு 5 முறை இலவச பயணம் (01/07/2025 முதல் 30/06/2026 வரை)
எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யவும், மேற்கண்ட சிறப்பு பரிசுகளை வெல்லவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.