புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருடன் மோதலால் சபை காவலர்களால் முதல்வர் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ நேரு வெளியேற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் கோரிக்கை வைத்ததால் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு பேரவைக்குள் 15 நிமிடங்களிலேயே திரும்ப அழைக்கப்பட்டார். புதுவை சட்டசபையில் இன்று பூஜ்யநேரத்தை தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், சட்டசபை குழுக்களுக்கான தற்போதைய தலைவர்கள், உறுப்பினர்கள் இந்த ஆண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
அப்போது சுயேச்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, குழு தலைவர்கள், உறுப்பினர்கள் பெயர் விபரத்தை தெரிவிக்க வேண்டும் என கோரினார். பேரவைத்தலைவர் செல்வம், ''கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவர்களே இந்த ஆண்டும் நீடிக்கின்றனர்'' என்றார்.
சட்டமன்ற உறுதிமொழிக் குழுவுக்கு தலைவர் மாற்றியதை அறிவிக்கவில்லையே என நேரு கேள்வி எழுப்பினார். சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவராக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக பேரவைத்தலைவர் செல்வம் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே உறுதிமொழிக்குழுத் தலைவராக இருந்த நேரு அண்மையில் நீக்கப்பட்டு பாஸ்கர் நியமிக்கப்பட்டிருந்ததால், கோபமடைந்த முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவான நேரு பேரவைத்தலைவர் செல்வத்தை கடுமையாக ஒருமையில் விமர்சித்து பேசினார். இதையடுத்து இக்கூட்டத் தொடர் முழுவதும் எம்எல்ஏ நேரு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று பேரவைத்தலைவர் செல்வம் அறிவித்து சபை காவலர்களை அழைத்து அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அவரை வெளியேற்றினர்.
தொடர்ந்து அமைச்சர் சாய்சரவணக்குமார் தனது துறைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி குறுக்கிட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினரை மன்னித்து மீண்டும் அவைக்கு அழைக்கும்படி பேரவைத்தலைவரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பேரவைத்தலைவர் செல்வம், சபையில் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விதிகள் உள்ளது. ஒருமையில் பேசியதை மன்னித்து அழைப்பு விடுக்க முதல்வர் கோரியதால், உறுப்பினர் நேருவை சபைக்கு அழைக்கிறேன் என தெரிவித்தார். இதையடுத்து நேரு சபைக்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனால் 15 நிமிடங்களில் மீண்டும் சபை நிகழ்வில் நேரு எம்எல்ஏ பங்கேற்றார்.
எம்எல்ஏ கோபத்துக்கு காரணம் என்ன?: புதுவை சட்மன்ற உறுதிமொழி குழு தலைவராக நேரு எம்எல்ஏ இருந்தார். இவருக்கும், பேரவைத்தலைவர் செல்வத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பேரவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். இதையடுத்து பேரவைத்தலைவர், உறுதிமொழி குழு தலைவர் பதவியிலிருந்து நேருவை நீக்கினார். இந்த விவகாரம்தான் இன்று சட்டப்பேரவையில் பேரவைத்தலைவர் - நேரு எம்எல்ஏ மோதலாக மாறியது.