ரத்தத்தில் ஜெயலலிதா சிலை, வில்வித்தை நாயகன்... யார் இந்த ஷிஹான் ஹுசைனி?


சென்னை: ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி(60) சிகிச்சை பலனின்றி காலமானார்.

மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகர்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனி தான்.

மூன்று முறை உலக கராத்தே போட்டியில் வென்றுள்ளார். ஜெயலலிதாவுக்கு மிக தீவிர ஆதரவாளராக இருந்த ஹூசைனி, சாலையில் தன்னுடைய கையில் 101 கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார். அதனை தொடர்ந்து ரத்தத்தால் ஜெயலலிதாவின் சிலையை அவர் செய்தது மேலும் சர்ச்சையையும் பரபரப்பையும் உருவாக்கியது. ஜெயலலிதாவின் சிலையினை உருவாக்குவதற்காக 8 ஆண்டுகள் உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்ததாகவும் அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இதனை அறிந்த ஜெயலலிதா இவரை கடுமையாக கண்டித்து அறிவுரை கூறியுள்ளார். அதேபோல 2015 ஜெயலலிதா பதவியை இழந்த நேரத்தில், அவர் மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்பதற்காக கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டு 7 நிமிடங்கள் இருந்தார்.

அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிப்பால் தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்த சூழலில் அவர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடலை தானம் செய்வதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு கராத்தே மற்றும் வில்வித்தை விளையாட்டு வீரர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தற்போது, அவரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளனர்.

x