கோவை: வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவா (40) என்ற பக்தர் மலையில் இருந்து இறங்கும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த 20 வருடங்களாக பெங்களூரில் பலசரக்கு கடை நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று (மார்ச் 24) தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அவர்கள் 7-வது மலையில் உள்ள சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் திரும்பி வரும்போது, இன்று அதிகாலை 3-வது மலையில் இறங்கியபோது சிவாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இவர் உடனடியாக வனத்துறையால் மீட்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சிவாவுக்கு நித்யா என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இருதயத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்துள்ளார்.
பிப்ரவரி 1 முதல் மே வரை வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே கோவை வெள்ளிங்கிரி மலையில் மலையேற சென்ற பலர் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்திருந்தது. எனவே சுமார் 6000 அடி உயரம் இருக்கக்கூடிய வெள்ளியங்கிரி மலைக்கு வருபவர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. மூச்சுத்திணறல், உடல் எடை பிரச்சினை, இதய பிரச்சினை இருப்பவர்கள் மலை ஏற வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.