16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 8-வது ஊதிய கமிஷனை உருவாக்க வேண்டும்; புதிய பணியிடங்கள் உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்; ரயில்வேயில் நேரடி பதவிகளை சரண்டர் செய்வதை நிறுத்த வேண்டும்; ரயில்வே பணிகளில் தனியாரை ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் அலுவலகம் முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசியதாவது: எங்களது 16 அம்ச கோரிக்கைகளில் மிக முக்கிய கோரிக்கை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

மத்திய அரசு 8-வது ஊதிய உயர்வை இன்னும் வழங்காமல் உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.51,000 வழங்க வேண்டும். ரயில்வேயின் முதுகெலும்பாகத் திகழும் தண்டவாளப் பணியாளர்களை ரயில்வே கேட், தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஆனால், அவர்கள் அலுவலகப் பணியை மேற்கொள்கின்றனர். மேலும், ஒரு சில ஊழியர்கள் ரயில்வே அதிகாரிகள் இல்லத்தில் பணியாற்றுகிறார்கள்.

எழும்பூரில் மட்டும் 14 பேர் தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபடாததால், மற்றவர்களுக்கு பணிச் சுமை அதிகரித்து வருகிறது. இதற்கு சென்னை ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தென்னக ரயில்வே ஊழியர்கள் சங்கச் செயல் தலைவர் சூர்யபிரகாஷ், செயல் பொதுச்செயலாளர் ராஜாராம், கோட்ட தலைவர் முரளி, கிளை செயலர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

x