புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடப்பாண்டுக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்: சுயேட்சை எம்எல்ஏ நேரு: அரசு தனியார் பள்ளிகளில் நடந்து வரும் விரும்பதகாத செயல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா
அமைச்சர் நமச்சிவாயம்: மாணவர்கள் ஆரோக்கியம் மனநலனுக்காக பள்ளிகளில் நவ்சேதனா செயல்படுகிறது. போதைப்பொருள் எதிர்ப்புக்குழு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் குழு ஆகியவையும் ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 15 அரசு மகளிர் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம். கூடுதலாக 12 பிரதமர் ஸ்ரீ பள்ளிகளில் சிசிடிவி நிறுவப்பட்டுள்ளன.
எம்எல்ஏ நேரு: இவ்வளவு விஷயம் செய்தாலும் விரும்பதகாத செயல்கள் தொடர்ந்து நடக்கிறது. பல பள்ளிகளில் பல புகார்கள் வருகிறது. தனியார் பள்ளிகளிலும் இதுபோல் நடக்கிறது. கண்காணிப்பு இல்லை. தனியார் பள்ளிகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை. தமிழகத்தை போன்று கட்டாயமாக்கவேண்டும். கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர் கொண்ட குழு அமையுங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: பெற்றோர் ஆசிரியர் சங்கம் அரசு பள்ளிகளில் அமைத்து நிதி ஒதுக்கியுள்ளோம். தனியார் பள்ளிகளில் குழு அமைக்க பரிசீலிக்கப்படும். எம்எல்ஏ நேரு: சிசிடிவி பல பள்ளிகளில் தேவை. நல்லொழுக்கக் கல்வியும் கற்றுத் தாருங்கள்.
அமைச்சர் நமச்சிவாயம்: முதல்வர் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா இந்த கல்வியாண்டு போட நடவடிக்கை எடுக்கப்படும். நல்லொழுக்க கல்வியை கட்டாயமாக்க பரிசீலிக்கப்படும்.